உள்ளூர் செய்திகள்

பாபநாசம் அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக கலெக்டர் கார்த்திகேயன் தண்ணீர் திறந்து வைத்தார். 

பாபநாசம் அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு - நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 86 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்

Published On 2023-11-17 09:19 GMT   |   Update On 2023-11-17 09:19 GMT
  • வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக பாபநாசம் அணைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.
  • பாபநாசம் அணையில் இருந்து இன்று முதல் 136 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

நீர் திறப்பு

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக பாபநாசம் அணைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 99 அடியாக உள்ளது. இதைத்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று பாபநாசம அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., அப்துல்வகாப் எம்.எல்.ஏ., துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்தனர்.

விவசாய நிலங்கள்

இதன் மூலம் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய் , கன்னடியான் கால்வாய், நெல்லை கால்வாய், பாளையங்கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலகால்வாய், கீழக்கால்வாய், தெற்கு, வடக்கு பிரதான கால்வாய்கள் ஆகிய கால்வாய்கள் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 86 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.

பாபநாசம் அணையில் இருந்து இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி வரை 136 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது . விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தண்ணீர் இருப்பைக் கருத்தில் கொண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News