- சாலையோரம் இருந்த கலைச்செல்வி என்பவர் வீட்டின் முன்புறம் அரசு பஸ் மோதியது.
- மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே மணிவண்ணன் கீழே விழுந்து உயிரிழந்தார்.
சீர்காழி,:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தற்காஸ் கிராமம் செல்லத்தம்பாள் நகரைச் சேர்ந்த மணிவண்ணன் (45). கூலி தொழிலாளி.
இவர் சிதம்பரத்திலிருந்து பழையாறு துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்ஸில் செல்லத்தம்பாள் பஸ் நிறுத்தத்தில் ஏறி அடுத்துள்ள தற்காஸ் பஸ் நிறுத்தத்தில் இறங்க முயன்றபோது, பஸ் நிறுத்தம் அருகே, எதிரே வந்த ஒரு தனியார் பஸ்ஸுக்கு வழி விட முயன்ற போது சாலையோரம் இருந்த கலைச்செல்வி என்பவர் வீட்டின் முன்புறம் அரசு பஸ் மோதியது.
இதில் அந்த வீட்டிலிருந்து வந்த மின் வயர் பேருந்தின் முன் பகுதியில் தொங்கிக்கொண்டு பஸ்ஸிலும் சிக்கியது.
இதில் பஸ்ஸின் முன் பகுதியிலிருந்த கம்பிகளில் மின்சாரம் பாய்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்ஸிலிருந்து இறங்க முயன்ற மணிவண்ணன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மணிவண்ணன் கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிவண்ணன் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த மணிவண்ணனுக்கு செல்வி (40) என்ற மனைவியும், கனிவண்ணன் (25) என்ற மகன், கௌசல்யா (15) என்ற மகளும் உள்ளனர்.