கோவையில் காதலை ஏற்க மறுத்த சிறுமியின் தாயை மிரட்டிய வாலிபர் கைது
- வாலிபர் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார்.
- மாணவியின் பெற்றோர் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள வேலையாபாளைத்தை சேர்ந்தவர் பிரதீப் (வயது 23).
இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதான 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார். கடந்த 6 மாதத்துக்கு முன்பு பிரதீப் அந்த மாணவியை தனியாக சந்தித்து தனது காதலை ஏற்குமாறு கூறி உள்ளார். ஆனால் மாணவி ஏற்க மறுத்து விட்டார்.
இது குறித்து அவர் தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் பிரதீப்பை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
சம்பவத்தன்று சிறுமியும், அவரது தாயும் அரசு ஆஸ்பத்திரி வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த வாலிபர் சிறுமியின் தாயிடம் உன்னால் தான் அவள் என்னுடன் பேச மறுக்கிறாள் என கூறி தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டினார்.
இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அப்போது பிரதீப் அங்கு இருந்து தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பிரதீப்பை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.