உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

Published On 2024-08-13 06:52 GMT   |   Update On 2024-08-13 06:52 GMT
  • கும்பல் பார்த்திபனை அரிவாளால் வெட்டியது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்துள்ளனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கப்பட்டினத்தை அடுத்த வட்டாலூர் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் கடல்மணி. இவரது மகன் பார்த்திபன்(வயது 24). இவர் பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட் வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு தனது ஊருக்கு அருகே உள்ள முத்து கிருஷ்ணபேரி கிராமத்தில் நடைபெற்ற பலவேசக்கார கோவில் கொடை விழாவில் கச்சேரி பார்த்துவிட்டு பார்த்திபன் நள்ளிரவில் தனது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் வட்டாலூர் ஊருக்கு வடபுறம் காட்டுப்பகுதியில் வைத்து ஒரு கும்பல் அவருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தகராறு முற்றியதில் அந்த கும்பல் பார்த்திபனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உடனே கொலை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

இந்நிலையில், இன்று காலை பார்த்திபனை கொலை செய்ததாக கூறி வட்டாலூர் பகுதியை சேர்ந்த பார்த்திபனின் உறவினரான பாஸ்கர் என்ற வாலிபர் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பாஸ்கர் தான் பார்த்திபனை கொலை செய்தார் என சரண் அடைந்த தகவல் அறிந்து, பாஸ்கரின் தாயார் செல்வி ஊருக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலங்குளம் தீயணைப்பு படை வீரர்கள் செல்வியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் பாஸ்கர் அளித்த தகவலின்பேரில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அனைவரையும் கைது செய்த பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் கொலையான பார்த்திபன் மீது பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News