இந்தியா (National)

121 பேர் பலியானதை அடுத்து ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

Published On 2024-07-04 01:26 GMT   |   Update On 2024-07-04 01:26 GMT
  • ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா என்ற சாமியார் இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார்.
  • இந்த ஆன்மீக கூட்டத்தின் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவர். சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் இந்த சத்சங்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். 80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு குழு அமைத்துள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் 121 உயிர்கள் உயிரிழந்ததை அடுத்து ஆக்ரா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 சத்சங்க நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 4 முதல் 11 வரை சயான் நகரிலும் ஜூலை 13 முதல் 23 வரை சாஸ்த்திரிபுரத்திலும் போலே பாபாவின் சத்சங்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Tags:    

Similar News