செய்திகள் (Tamil News)

கேரளா கோயில் தீ விபத்து: பலியானோர் குடும்பத்தினர், காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி, அமித் ஷா ஆறுதல்

Published On 2016-04-10 07:11 GMT   |   Update On 2016-04-10 07:11 GMT
கேரளாவில் கோயில் திருவிழாவில் நிகழ்ந்த வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ள நிலையில் இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களை பா.ஜ.க. தலைவர் அமித் ஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். டெல்லியில் இருந்து தீப்புண் சிறப்பு சிகிச்சை டாக்டர்கள் குழுவுடன் பிரதமர் மோடியும் கேரளா விரைந்துள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பரவூர் பகுதியில் உள்ள புட்டிங்கல் தேவி கோயிலில் வாண வேடிக்கையால் இன்று அதிகாலை நிகழ்ந்த வெடி விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகினர். 350-க்கு அதிகமானோர் காயமடைந்தனர்.

இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் இந்த கோர விபத்து தொடர்பாக கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். மிக மோசமான காயமடைந்தவர்களை தீவிர சிகிச்சைக்காக இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களில் ஏற்றிச் செல்லவும் ஏற்பாடு உத்தரவிட்டார். விபத்தில் சிக்கிய உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக விரைந்து செல்லுமாறு மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டாவை அறிவுறுத்திய பிரதமர் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழந்த கொல்லம் மாவட்டத்துக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரையும், சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூற தீர்மானித்தார்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள ஏய்ம்ஸ் உள்ளிட்ட பிரபல மருத்துவமனைகளை சேர்ந்த சுமார் 15 தீப்புண் சிறப்பு சிகிச்சை மருத்துவர் குழுவுடன் பிரதமர் மோடி இன்று பகல் 12 மணியளவில் விமானம் மூலம் கேரளாவுக்கு புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையே, இந்த விபத்தில் படுகாயமடைந்து திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று காலை 11 மணியளவில் சென்று சந்தித்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

Similar News