செய்திகள் (Tamil News)

திருவனந்தபுரம் அருகே வேன் - பஸ் மோதல்: பெண் உள்பட 5 பேர் பலி

Published On 2016-10-08 04:19 GMT   |   Update On 2016-10-08 04:19 GMT
திருவனந்தபுரம் அருகே வேன் - பஸ் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உள்பட 5 பேர் பலியானார்கள்
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தை அடுத்த காஞ்சிரப்பள்ளியைச் சேர்ந்தவர் மேத்யூ. ரேசன் கடை நடத்தி வருகிறார். மேத்யூவின் மனைவி அச்சம்மா (வயது 72). இவர்களின் மகன் ஷாஜி (45), மகள் ஜெயினம்மா (33). இவர்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நேற்று பக்தி சுற்றுலா சென்றனர்.

தனி வேனில் பல்வேறு ஆலயங்களுக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினர். புஷ்பகிரி அருகே வேன் வந்தபோது எதிரே ஒரு தனியார் பஸ் வேகமாக வந்தது.

இதில், பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் வேனில் இருந்த அச்சம்மா, ஷாஜி, ஜெயினம்மா மற்றும் வேன் டிரைவர் பிஜு ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து நடந்ததும், அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கட்டப்பனை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதில் இவான் என்ற 1½ வயது குழந்தை ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிர் இழந்தது. 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் கட்டப்பனை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் பற்றி கட்டப்பனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், தனியார் பஸ் தனக்கு முன் சென்ற ஆட்டோவை முந்திச்செல்ல முயன்றபோது, விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News