செய்திகள் (Tamil News)

’கேட்வாக்’ நடந்துவந்த 85 வயது பாட்டி: விருந்தாவனம் விதவைகள் பங்கேற்ற ’பேஷன் ஷோ’

Published On 2016-10-16 06:07 GMT   |   Update On 2016-10-16 06:07 GMT
பழங்கால கட்டுப்பெட்டித்தனத்தை எல்லாம் தகர்த்தெறியும் வகையில் டெல்லியில் விதவைகள் பங்கேற்ற ’பேஷன் ஷோ’ பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
புதுடெல்லி:

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுராவிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது விருந்தாவனம். இந்த இடம் கோபிகா கன்னிகளுடன் கிருஷ்ணன் கேளிக்கை செய்து மகிழ்ந்த இடம். இப்படிப்பட்ட விருந்தானவத்தில் இறந்துபோனால் நேரடியாக சொர்க்கத்திற்கு போய்விடலாம். அவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்ற நம்பிக்கை உள்ளது

இதற்காகவே சாவைத் தேடி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து முதியவர்கள் இங்கே வந்து சேர்கிறார்கள். குறிப்பாக வயதான பெண்கள், விதவைகள் விருந்தானவத்தில் கொண்டுவந்து விடப்படுகிறார்கள்.

அவர்கள் யமுனை ஆற்றில் குளித்து கரையேறி கோவில்கோவிலாக வழிபட்டு தங்கள் சாவிற்காக காத்திருக்கிறார்கள். இங்கு பெரும்பான்மையாக உள்ள வயதானவர்கள் உணவிற்கும் இருப்பிடத்திற்கும் குளிராடைகளுக்கும் வழியின்றி அல்லாடுகிறார்கள்.

இந்நிலையில், விருந்தாவனம், வாரனாசி மற்றும் கேதர்நாத்தில் வெள்ளம் தாக்கியதால் கணவன்மார்களை இழந்து நிற்கும் கைம்பெண்கள் என சுமார் 400 விதவையர்களை டெல்லிக்கு அழைத்துவந்த சுலாப் இண்டர்நேஷனல் என்ற தொண்டு நிறுவனம் விதைவயர்களுக்கான ’பேஷன் ஷோ’ விழா ஒன்றை நேற்று நடத்தியது.

மத்திய மந்திரி மேனகா காந்தி தொடங்கிவைத்த இந்த விழாவில் இளம்பெண்கள் முதல் 80 வயதுக்கும் அதிகமான பெண்கள் நவநாகரிக உடைகளை அணிந்து மேக்கப், லிப்ஸ்டிக் அலங்காரத்துடன் மேடைமீது பூனைநடை (கேட்வாக்) நடந்துவந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

14 வயதில் திருமணம் செய்து, 15 வயதில் கணவரை இழந்த ஒருபெண் தனது 85-வது வயதில் மொட்டையடித்த தலையுடன் லிப்ஸ்டிக் அணிந்து மேடையின்மீது புன்னகையுடன் தத்தித்தத்தி நடந்து வந்த காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Similar News