செய்திகள் (Tamil News)

கட்டுமான பணியின்போது கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் பலி

Published On 2017-02-01 12:40 GMT   |   Update On 2017-02-01 12:40 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டுவந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரின் ஜாஜ்மாவ் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த ஓர் ஆண்டாக ஆறு மாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்தக் கட்டுமானப் பணியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுவந்தனர். 

இந்நிலையில், இன்று காலை கட்டிடம் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கும் போது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கட்டிடம் சரிந்து விழுந்தது. இந்த விபத்தால் பல தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். விபத்து நடந்த இடத்திற்கு உடனே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில், பலியான 7 தொழிலாளர்களின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. படுகாயத்துடன் மீட்கப்பட்ட சுமார் 30 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கட்டிட இடிபாடுகளில் இன்னும் யாரும் சிக்கியுள்ளனரா? என மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கட்டிடத்திற்கு வலுவான அடித்தளம் இல்லாததே விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News