செய்திகள் (Tamil News)
டெல்லி: பள்ளி கழிப்பறையில் 9-ம் வகுப்பு மாணவர் உடல் கண்டெடுப்பு
டெல்லியில் பள்ளிக்கூட கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவரின் உடலை போலீசார் மீட்டனர். ஆனால், தங்களது மகன் கொல்லப்பட்டு உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதுடெல்லி
வடகிழக்கு தில்லி கார்வால் நகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் துஷார் (16), என்ற மாணவன் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாணவன் பள்ளிக்கூட கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்தான். இதைக்கண்ட சக மாணவர்கள் துஷாரை மீட்டு அருகிலுள்ள ஜி.டி.பி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து மாணவனின் பெற்றோர் கூறுகையில், பள்ளியில் சில மாணவர்கள் துஷாருடன் சண்டை போட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் துஷார் கடுமையாக தாக்கப்பட்டிருக்கலாம் என புகார் தெரிவித்தனர்.
ஆனால், பள்ளி நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. துஷார் டயரியா எனும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, குர்கானில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த பிரதியுமன் (7) என்ற சிறுவன் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி பள்ளி கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews