செய்திகள்

உண்மையான நம்பிக்கை வெற்றி பெற்றது - பாக். ஜெயிலில் இருந்து திரும்பியவரின் மனைவி நெகிழ்ச்சி

Published On 2018-08-14 00:47 GMT   |   Update On 2018-08-14 00:47 GMT
எனது கணவர் கண்டிப்பாக வருவார் என உண்மையாக நம்பியதால் அது நிறைவேறியது என பாகிஸ்தான் ஜெயிலில் இருந்து திரும்பியவரின் மனைவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். #GajanandSharma #Lahoreprison
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் கஜானந்த் சர்மா, கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெய்ப்பூரில் இருந்து திடீரென்று தனது 32-வது வயதில் காணாமல் போனார். அவரது குடும்பத்தாரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கஜானந்த் சர்மாவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பல ஆண்டுகள் கழித்து குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்தது.

வாழ்நாளில் ஒரு முறையாவது தனது கணவரின் முகத்தை காண வேண்டும் என்ற ஆவலுடனும், ஏக்கத்துடனும் அவரது மனைவி மக்னி தேவி நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையே, பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அங்குள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 26 மீனவர்கள் உள்பட 29 கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் அந்நாட்டு அரசு நேற்று முன்தினம் விடுதலை செய்தது. இந்திய எல்லைப்பகுதியான அட்டாரி-வாகா எல்லைப்பகுதிக்கு அவர்கள் பஸ் மூலம் அழைத்து வரப்பட்டனர். விடுதலையானவர்களில் ஒருவரான கஜானந்த் சர்மாவை, அட்டாரி-வாகா எல்லைப்பகுதியில் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடன் கட்டித்தழுவி வரவேற்றனர்.



இந்நிலையில், எனது கணவர் கண்டிப்பாக வருவார் என உண்மையாக நம்பியதால் அது நிறைவேறியது என பாகிஸ்தான் ஜெயிலில் இருந்து திரும்பியவரின் மனைவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், நிச்சயம் அவர் திரும்பி வருவார் என கடந்த 36 ஆண்டுகளாக மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்தேன். அவரை பிரிந்திருந்த காலங்கள் மிக கடினமானவை.

அவர் வந்ததும் பாகிஸ்தானுக்கு எப்படி சென்றீர்கள் என்பது குறித்தும், இத்தனை நாள் எப்படி பொழுதை கழித்தீர்கள் என்பது குறித்தும் விசாரிக்க உள்ளேன்.

எனது கணவர் கண்டிப்பாக வருவார் என உண்மையாக நம்பினேன். அதனால் தான் எனது நம்பிக்கை நிறைவேறியது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.#GajanandSharma #Lahoreprison
Tags:    

Similar News