இந்தியா

பீகாரில் 11 நாட்களில் 5-வது பாலம் இடிந்து விழுந்தது: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

Published On 2024-06-30 02:18 GMT   |   Update On 2024-06-30 02:18 GMT
  • 2 வாரங்களுக்குள் 5 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்துள்ளது.
  • தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

பாட்னா:

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள மாதேபூர் நகரில் பூதாஹி ஆற்றின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. மதுபானியை சுபால் மாவட்டத்துடன் இணைக்கும் வகையில் 75 மீட்டர் நீளத்துக்கு பாலம் கட்டப்பட்டு வந்தது.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் பீகார் அரசின் ஊரகப் பணிகள் துறையின் மேற்பார்வையில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வந்தன.

இந்த நிலையில் இந்த பாலம் நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

கனமழையால் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து நீரோட்டம் அதிகரித்ததால் பாலம் இடிந்து விழுந்ததாகவும், நீர்மட்டம் குறைந்த பிறகு பாலம் கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பீகாரில் கடந்த 11 நாட்களில் நடந்த 5-வது சம்பவம் இதுவாகும்.

18-ந் தேதி அராரியா மாவட்டத்தில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்தது.

22-ந் தேதி சிவான் மாவட்டத்தில் கண்டக் கால்வாயின் மீது 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிறிய பாலம் இடிந்து விழுந்தது.

23-ந் தேதி, கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடந்து வந்த பாலம் இடிந்து விழுந்தது.

26-ந் தேதி கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் மதியா ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.

2 வாரங்களுக்குள் 5 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமார் அரசை கடுமையாக சாடினார்.

இதுப்பற்றி அவர் கூறுகையில், ''நிதிஷ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது, இதன் விளைவாக மாநிலத்தில் அனைத்து கட்டுமானப் பணிகளிலும் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

Tags:    

Similar News