இந்தியா (National)

பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் காலில் விழுந்து கெஞ்சிய மந்திரி- டெல்லியில் பரபரப்பு

Published On 2024-10-06 03:28 GMT   |   Update On 2024-10-06 03:28 GMT
  • கவர்னர் சக்சேனாவை நேரில் சந்தித்து முறையிடுதற்காக டெல்லி மந்திரி சவுரப் பரத்வாஜ் தலைமையில் அணி திரண்டனர்.
  • கவர்னரை சந்திக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

புதுடெல்லி:

டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக கடந்த 2015-ம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால், அரசு பஸ்களில் பெண்களின் பாதுகாப்புக்காக பயணிகளின் பாதுகாவலர் (பஸ் மார்ஷல்) என்ற பணியிடங்களை உருவாக்கினார்.

இதன்படி ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட தன்னார்வலர்கள் 10 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டனர். இந்த திட்டத்துக்கு எதிர்ப்புகள் உருவான நிலையில் கடந்த ஆண்டு அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பாதுகாவலர்களை மீண்டும் பணியமர்த்தும் விதமாக கடந்த மாதம் டெல்லி சட்டசபையில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் சக்சேனாவை நேரில் சந்தித்து முறையிடுதற்காக டெல்லி மந்திரி சவுரப் பரத்வாஜ் தலைமையில் அணி திரண்டனர். ஆனால் கவர்னரை சந்திக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதற்கிடையே டெல்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ.க. எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தாவை ஆம்ஆத் கட்சியினர் சந்தித்து, தங்களோடு சேர்ந்து கவர்னரை சந்திக்க வருமாறு அழைத்தனர். ஒரு கட்டத்தில் மந்திரி சவுரப் பரத்வாஜ், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் காலில் விழுந்து கெஞ்சினார்.

டெல்லி மந்திரி, பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் காலில் விழுந்த இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றன.

Tags:    

Similar News