இந்தியா

பீகாரில் பாஜக கூட்டணியின் ஊழல் ஆட்சியால்தான் பாலங்கள் இடிந்து விழுகிறது - தேஜஸ்வி யாதவ்

Published On 2024-07-03 14:45 GMT   |   Update On 2024-07-03 14:45 GMT
  • பீகார் மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் 9 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.
  • பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியில் இருப்பதால் கோடி மீடியாக்கள் இந்த விவகாரத்தை பற்றி பேசுவதில்லை.

பீகார் மாநிலம் சிவன் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஒரே நாளில் 2 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலம் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த 2 பாலங்களும் எம்பி பிரபுநாத் சிங் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பீகார் மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் 9 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் பீகாரில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுந்து வருவதை அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார். 

அதில், "பா.ஜ.க கூட்டணியில் ஊழல் ஆட்சியில், பீகார் மாநிலத்தில், கடந்த 15 நாட்களில் 9 பாலங்களில் இடிந்து விழுந்துள்ளன. குறிப்பாக, இன்று (03.07.24) மட்டும், 3 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இந்த விவகாரத்தில் யார் குற்றவாளி என்பதை 18 ஆண்டுகால தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சொல்ல வேண்டும். ஆனால் பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியில் இருப்பதால் கோடி மீடியாக்கள் இந்த விவகாரத்தை பற்றி பேசுவதில்லை.

ஆனால், 6 கட்சிகள் அடங்கிய இரட்டை இயந்திர ஆட்சிக்கு 15 நாட்களில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான 10 பாலங்கள் இடிந்து விழுந்த பிறகும், எதிர்க்கட்சிகளை குறை சொல்ல எந்த சாக்குபோக்கும் கிடைக்காமல் இருப்பது விசித்திரமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News