இந்தியா

வயநாடு நிலச்சரிவு- பலி எண்ணிக்கை 380ஆக உயர்வு

Published On 2024-08-04 16:43 GMT   |   Update On 2024-08-04 16:43 GMT
  • உடல்கள் எதுவும் கிடைக்காவிட்டால் நாளையுடன் மீட்புப் பணிகளை நிறுத்துவது குறித்து ஆலோசனை.
  • நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களின் எண்ணிக்கை 180ஆக உள்ளது.

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளரிவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அடுத்தத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.

வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் வேறோடு சாய்ந்தும், தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணிகள் இன்னமும் முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது. இன்று 6ம் நாளை எட்டிய மீட்பு பணிகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 380-ஐ கடந்துள்ளது.

மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

குறிப்பாக, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் இருந்தும், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 35 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்தும் உடல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.

இதற்கிடையே, மீட்பு பணியின் போது அந்த பகுதிகளில் உடல்கள் எதுவும் கிடைக்காவிட்டால் நாளையுடன் மீட்புப் பணிகளை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், மாயமானவர்களின் எண்ணிக்கை 180ஆக உள்ள நிலையில், ரேடார், ட்ரோன் மூலம் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News