இந்தியா (National)

சிகரெட், புகையிலை, குளிர்பானங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி உயர்கிறது

Published On 2024-10-03 07:11 GMT   |   Update On 2024-10-03 07:11 GMT
  • வரி விகிதங்களை மாற்றுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
  • மருந்து விலை குறையும்- மின்சார வாகனங்கள் மீதான வரி அதிகரிக்கிறது.

புதுடெல்லி:

ஜி.எஸ்.டி. விகிதங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது குறித்து மந்திரிகள் குழு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மந்திரிகள் குழுவினர் பங்கேற்ற கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சாமானிய மக்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக பொது மக்கள் பயன்படுத்தும் 100-க்கும் மேற்பட்ட பொருட்களின் வரி விகிதங்களை மாற்றுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதில் உணவு பொருட்களுக்கு விதிக்கப்படும் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைப்பது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள், விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் டிராக்டர்கள் உள்ளிட்டவற்றிற்கான ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

வரி குறைக்கப்படும் பட்சத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் பாதிக்கப்படும் என்பதால் அதை ஈடுகட்ட சில பொருட்கள் மீதான வரியை உயர்த்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதன்படி சில டிராக்டர்களின் விலை 5 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மருந்துகளுக்கான வரி 5 சதவீதம் வரை குறைய உள்ளது. அதே நேரம் மின் வாகனங்களின் மீதான ஜி.எஸ்.டி. வரி அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் அந்த வாகனங்களின் விலை உயரும்.

தற்போது மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக உள்ளது. இது 12 சதவீதமாக குறையும் என தெரிகிறது. சிமென்ட் மீதான வரியில் மாற்றம் இருக்காது. அதே நேரம் அழகுசாதன பொருட்கள், குளிர்பானங்கள், சிகரெட், புகையிலை மீதான ஜி.எஸ்.டி. வரி உயர உள்ளது.

இதுதொடர்பாக வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படுகிறது. இந்த முடிவுகள் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். அதைத்தொடர்ந்து வரி விகிதங்களில் மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News