இந்தியா

மும்பையில் கனமழை- 36 விமானங்கள் ரத்து, ரெயில் சேவை பாதிப்பு

Published On 2024-07-21 16:21 GMT   |   Update On 2024-07-21 16:21 GMT
  • மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
  • ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு முறை ஓடுபாதை செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மராட்டியம், கேரளம், கர்நாடகம், கோவாவில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், மும்பையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இடைவிடாமல் பெய்த கனமழையால், விமான நிலையத்தில், ஆபரேட்டர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு முறை ஓடுபாதை செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதில், விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 12 விமானங்கள் உள்பட இண்டிகோவின் 24 விமானங்களும், ஏர் இந்தியாவின் எட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், மும்பை விமான நிலையத்தில் விஸ்தாரா தனது நான்கு விமானங்களையும் ரத்து செய்துள்ளது.

ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஆகாசா உட்பட குறைந்தது 15 விமானங்கள் அருகிலுள்ள குறிப்பாக அகமதாபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு மாலை 4 மணி வரை திருப்பி விடப்பட்டன.

மும்பையில் 82 மிமீ மழை பெய்துள்ளது

பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தகவலின்படி, மும்பையில் மாலை 4 மணி வரை நகரில் 82 மிமீ மழையும், கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் 96 மிமீ மழையும், மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 90 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

கனமழை காரணமாக மும்பை முழுவதும் விமான சேவைகள் மட்டுமின்றி சாலை மற்றும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், மத்திய ரயில்வேயின் துறைமுகப் பாதையில் சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

அடுத்த 18-24 மணி நேரத்தில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News