இந்தியா

உப்பள்ளி- புனே இடையே வந்தே பாரத் ரெயில் சேவை- பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

Published On 2024-09-15 03:13 GMT   |   Update On 2024-09-15 03:13 GMT
  • வந்தே பாரத் ரெயில் வருகிற 18-ந்தேதி முதல் வாரத்தில் 3 நாட்கள் இயங்க உள்ளது.
  • சாதாரண சேர் கார் பெட்டியில் 478 இருக்கைகளும், எக்சிக்கியூட்டிவ் கிளாசில் 52 இருக்கைகளும் உள்ளன.

பெங்களூரு:

நாட்டின் அதிவேக ரெயில் சேவையான வந்தே பாரத் ரெயில் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கர்நாடகத்தை பொறுத்தவரை சென்னை-மைசூரு, பெங்களூரு-தார்வார், பெங்களூரு-மதுரை, பெங்களூரு-கோவை, மங்களூரு-கோவா உள்ளிட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடகர்நாடக மாவட்டமான உப்பள்ளியில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-புனே இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் உப்பள்ளி-புனே வந்தேபாரத் ரெயிலின் தொடக்க விழா நாளை (திங்கட்கிழமை) நடக்க உள்ளது.

இந்த ரெயில் சேவையை நாளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். இந்த வந்தே பாரத் ரெயில் புனேயில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு இரவு 11.40 மணிக்கு உப்பள்ளியை வந்தடையும். தொடக்க விழாவில் இந்த ரெயில் மிரஜ், பெலகாவி, தார்வார் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த வந்தே பாரத் ரெயில் வருகிற 18-ந்தேதி முதல் வாரத்தில் 3 நாட்கள் இயங்க உள்ளது.

அதாவது உப்பள்ளி-புனே இடையே புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், புனே-உப்பள்ளி இடையே வியாழன், சனி, திங்கட்கிழமைகளிலும் இயங்க உள்ளது.

எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-புனே வந்தேபாரத் ரெயில் (வண்டி எண்: 20669) உப்பள்ளியில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு புனேயை சென்றடையும். மறுமார்க்கமாக புனே-எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி வந்தே பாரத் ரெயில் (20670) புனேயில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு உப்பள்ளியை வந்தடையும். இந்த ரெயிலின் பயண நேரம் 8½ மணி நேரம் ஆகும்.

இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் தார்வார், பெலகாவி, மிரஜ், சாங்கிலி, சத்தாரா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த வந்தே பாரத் ரெயிலில் மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் சாதாரண சேர் கார் பெட்டியில் 478 இருக்கைகளும், எக்சிக்கியூட்டிவ் கிளாசில் 52 இருக்கைகளும் உள்ளன.

இந்த தகவலை தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News