இந்தியா (National)

அண்டை நாடுகளை விட பட்டினி கொடுமை அதிகரிப்பு.. மோடி அரசு நிச்சயம் கவிழும் - அகிலேஷ் ஆரூடம்

Published On 2024-10-20 08:52 GMT   |   Update On 2024-10-20 08:53 GMT
  • மொத்தம் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான சீட் பங்கீடு தற்போது காரசாரமாக நடந்து வருகிறது.
  • நடக்க உள்ள தேர்தலின் முடிவுகள் மகாராஷ்டிராவில் மட்டுமல்ல நாட்டின் அரசியலையே மாற்றியமைக்கும்.

மொத்தம் தொகுதிகளைக் கொண்ட மராட்டிய மாநிலத்தில், வரும் நவம்பர் 20-ந்தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ந்தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் பிரசார பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

மகாராஷ்டிர மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. ஆளும் மாஹாயுதி [ பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ்] மற்றும் மகாவிகாஸ் அகாதி [ காங்கிரஸ் - உத்தவ் தாக்கரே சிவசேனா - சரத் பவார் தேசியவாத காங்கிரஸ்] ஆகிய இரண்டு கூட்டணிகள் களத்தில் உள்ளன. மொத்தம் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான சீட் பங்கீடு தற்போது காரசாரமாக நடந்து வருகிறது.

கடந்த மக்களவை தேர்தலில் மாகா விகாஸ் அகாதி - இந்தியா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி பாஜக மகாயுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் கவனத்துடன் பிரசாரத்துக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் காங்கிரசுடன் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மகாராஷ்டிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

துலே பகுதியில் பிரசாரம் செய்த அவர், மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் பாஜக விரக்தியில் உள்ளது. சத்ரபதி சிவாஜிக்கு சிலை வைப்பதிலும் கூட அவர்கள் ஊழல் செய்துள்ளனர். மராட்டிய மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்.

இந்தியாவை உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாற்றுவோம் என பாஜக கூறியது. ஆனால் நமது அண்டை நாடுகள் நம்மை விட நன்றாக செயல்படுகின்றன. அண்டை நாடுகளை விட இந்தியாவில் பட்டினி கொடுமை அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பிரசாரத்தின்போது பேசிய அவர், நடக்க உள்ள தேர்தலின் முடிவுகள் மகாராஷ்டிராவில் மட்டுமல்ல நாட்டின் அரசியலையே மாற்றியமைக்கும். தேர்தல் முடிவுக்கு பிறகு, மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியாக கவிழ்ந்து விடும் என்று தெரிவித்துள்ளார். 2024 பட்டினி குறியீட்டில் இலங்கை, பர்மாவை விட பின்தங்கியும், பஞ்சத்தால் அவதிப்படும் பாகிஸ்தானுக்கு சமமான நிலையிலும் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News