இந்தியா (National)

பாகிஸ்தான் செல்வது ஏன்?: மத்திய மந்திரி ஜெய்சங்கர் விளக்கம்

Published On 2024-10-05 17:57 GMT   |   Update On 2024-10-05 17:57 GMT
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு பாகிஸ்தானில் நடைபெறுகிறது.
  • இதில் பங்கேற்க வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தலைமையிலான குழு பாகிஸ்தான் செல்கிறது.

புதுடெல்லி:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார். அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அவர் பாகிஸ்தானில் தங்கியிருக்க உள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இம்மாத மத்தியில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள செல்கிறேன்.

நான் பாகிஸ்தான் செல்வது இரு நாட்டு உறவுகள் குறித்து பேசுவதற்கு அல்ல; அது பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி.

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளின் பதட்டமான தன்மை காரணமாக, ஊடகங்களுக்கு எனது பயணம் குறித்து நிறைய ஆர்வம் இருக்கலாம். நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன்.

இது பல நாடுகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி. நான் இந்த அமைப்பில் நல்ல உறுப்பினராக இருப்பேன், கண்ணியமான நபராக, அதற்கேற்ப நடந்து கொள்வேன். பாகிஸ்தானில் உச்சி மாநாடு நடப்பதால் எனது பயணத்தின் தன்மை மாறுபாடு அடையாது.

இந்த மாநாட்டிற்கு செல்லும் நீங்கள், என்ன செய்யப் போகிறீர்கள், என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என நீங்கள் கேட்கலாம். நான் தெளிவாகவும், கண்ணியமாகவும் நடந்துகொள்வேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News