இந்தியா (National)

இனிமேல் போக வீடு கூட இல்லை.. என்னை ஊழல்வாதியாக சித்தரிக்க மோடி சதி செய்கிறார்- கெஜ்ரிவால்

Published On 2024-09-22 09:35 GMT   |   Update On 2024-09-22 10:47 GMT
  • 10 வருடங்களாக முதல்வர் பதவியில் இருந்தும் இதன்பிறகு செல்வதற்கு எனக்கென ஒரு வீடு கூட இல்லை.
  • நேர்மையானவனாக இல்லையென்றால் மருத்துவமனைகளில் சிகிச்சைகளை இலவசமாகியிருக்க முடியுமா?

டெல்லி 

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் 6 மாதங்கள் கழித்து ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் தனது முதல்வர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து அம்மாநில கல்வி அமைச்சர் அதிஷி நேற்றைய தினம் டெல்லி முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் இன்று ஜந்தர் மந்தரில் நடந்த ஜனதா கி அதாலத் நிகழ்வில் பங்கேற்று பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீது ஊழல் பலி போட பிரதமர் மோடி சதி செய்வதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

 

வீடு இல்லை..

'கடந்த 10 வருடங்களாக டெல்லி அரசை நேர்மையாக நடத்தி வந்தேன். எனவே என்னை ஜெயிக்க ஒரே வழி எனது நேர்மையின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதுதான் என்று மோடி கண்டுகொண்டார். எனக்கு நாற்காலி பசி இல்லை. எனவே நான் ராஜினாமா செய்தேன். நான் இங்கே பணம் சம்பாதிக்க வரவில்லை. நாட்டின் அரசியலை மாற்ற வந்தேன். இன்னும் ஓரிரு நாட்களில் நான் எனக்கு வழங்கப்பட முதலமைச்சர் குடியிருப்பை விட்டு வெளியேறுவேன். 10 வருடங்களாக முதல்வர் பதவியில் இருந்தும் இதன்பிறகு செல்வதற்கு எனக்கென ஒரு வீடு கூட இல்லை. பாஜக என்னை ஊழல்வாதி என்று கூறிவருவதால் நான் சோகத்தில் தவித்து வருகிறேன்.

யார் திருடர்கள்?

இந்த அர்விந்த் கெஜ்ரிவால் நேர்மையானவனாக இல்லையென்றால் இலவச மின்சாரம் வழங்கியிருக்க முடியுமா?, நேர்மையானவனாக இல்லையென்றால் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் கொண்டுவந்திருக்க முடியுமா? குழந்தைகளுக்குத் தரம் வாய்ந்த பள்ளிகளைக் கட்டித் தந்திருக்க முடியுமா? மருத்துவமனைகளில் சிகிச்சைகளை இலவசமாகியிருக்க முடியுமா? தற்போது 22 மாநிலங்களில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. அந்த மாநிலங்களில் ஒன்றிலாவது இலவச மின்சாரமும் ,பெண்களுக்கு இலவச பேருந்து பயணமும் கொண்டுவந்திருக்கிறார்களா? இப்போது சொல்லுங்கள் நான் திருடனா? இல்லை என்னை சிறைக்கு அனுப்பியவர்கள் திருடர்களா என்று சரமாரியாகக் கேள்வியெழுப்பியுள்ளார்.

Tags:    

Similar News