இந்தியா

இரு சமூகத்தினர் இடையே மோதல்: ஒடிசாவின் பாலசோர் பகுதியில் ஊரடங்கு

Published On 2024-06-18 14:39 GMT   |   Update On 2024-06-18 14:39 GMT
  • நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
  • கலவரத்தால் பாலசோர் பகுதி முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.

புவனேஸ்வர்:

ஒடிசாவின் பாலசோர் நகரில் உள்ள புஜாக்கியா பிர் பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்டதொரு சமூகத்தினர் அங்கு விலங்குகளை பலியிட்டு அதன் ரத்தத்தை சாலையில் வழிந்தோடவிட்டதாகக் குற்றம்சாட்டி நேற்று அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் சாலையில் அமர்ந்து தர்ணா நடத்தினர். அப்போது தர்ணாவில் ஈடுபட்டவர்கள் மீது எதிர்தரப்பிலிருந்து கல்வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இருதரப்புக்கும் இடையே சண்டை மூண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இந்தக் கலவரத்தில் போலீசார் உள்பட பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிசா முதல் மந்திரி மோகன் சரண் மாஜி, பாலசோர் மாவட்ட கலெக்டரை தொடர்புகொண்டு அங்குள்ள கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இந்தக் கலவரத்தால் பாலசோர் பகுதி முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாலசோர் பகுதியில் கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. கலவரம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News