இந்தியா

முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது எம்.பி.-க்களுடன் முக்கிய ஆலோசனை

Published On 2024-06-07 04:29 GMT   |   Update On 2024-06-07 04:29 GMT
  • ஜொகன்மோகன் ரெட்டி மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன.
  • சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோர் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் பா.ஜ.க.பவன் கல்யாண் கூட்டணி 21 இடங்களில் வெற்றி பெற்றது. மீதமுள்ள 4 எம்.பி. தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும் ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் மேல் சபையில் 11 எம்.பி.க்கள் உள்ளனர். ஆந்திராவில் தேர்தலின் பொது பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

மேலும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் வழக்கு பதிவு செய்யப்படாமலே கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஜொகன்மோகன் ரெட்டி மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக பொறுப்பேற்றதும் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவருடைய கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது.

இதனால் ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிலர் கட்சி தாவ வாய்ப்பு உள்ளது.

இதனை தடுக்க ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தி வருகிறார். சில எம்.பி.க்கள் பா.ஜ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கலாம் அதன்மூலம் தெலுங்கு தேசம் கட்சி எடுக்கும் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியும் என கூறியுள்ளனர்.

இது குறித்து ஜெகன்மோகன் ரெட்டி தீவிரமாக ஆலோசித்து வருவதாக அவருடைய கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கனவே சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோர் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளனர்.

ஜெகன்மோகன் ரெட்டியும் ஆதரவு அளித்தால் ஆந்திர மாநிலத்தில் உள்ள 25 எம்.பி.க்களின் முழுமையான ஆதரவு பா.ஜ.க.வுக்கு. கிடைக்கும்.

இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News