இந்தியா

நீட் தேர்வில் முதலிடம்.. டாக்டர் ஆகும் முன் தற்கொலை செய்து கொண்ட மருத்துவ மாணவர்

Published On 2024-09-16 12:04 GMT   |   Update On 2024-09-16 12:04 GMT
  • விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல கேள்விகளை எழுப்பியது.
  • தற்கொலை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நவ்தீப் சிங் என்ற மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 25 வயதான நவ்தீப் சிங் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்டி படிப்பில் பயின்று வந்தார்.

இந்த நிலையில், பார்சி அஞ்சுமன் கெஸ்ட் ஹவுஸ்-இல் தங்கி படித்து வந்த நவ்தீப் சிங் விடுதியில் உள்ள தனது அறையில் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் மருத்துவ தேர்வில் நாட்டிலேயே முதல் மதிப்பெண் பெற்று அசத்தினார் நவ்தீப் சிங். எனினும், மருத்துவ படிப்பை முடிக்கும் முன் அவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

 


சம்பவத்தன்று நவ்தீப் சிங்கின் தந்தையும், பள்ளி முதல்வருமான கோபால் சிங் தன் மகனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து வந்துள்ளார். எனினும், மகன் அழைப்பை ஏற்காததை அடுத்து நவ்தீப் நண்பர்களை தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து நவ்தீப் அறைக்கு சென்ற அவரது நண்பர்கள், அவரின் அறை கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்ததை கண்டனர்.

எவ்வளவு தட்டியும் உள்ளிருந்து எந்த பதிலும் கிடைக்காததை அடுத்து, நண்பர்கள் சேர்ந்து நவ்தீப் சிங்கின் அறை கதவை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே சென்ற நண்பர்களுக்கு அறையில் நவ்தீப் சிங் உயிரிழந்த நிலையில், சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நவ்தீப் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News