இந்தியா

பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து: தீர்மானம் நிறைவேற்றிய நிதிஷ் குமார் கட்சி

Published On 2024-06-29 13:05 GMT   |   Update On 2024-06-29 13:05 GMT
  • ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயல் தலைவராக சஞ்சய் ஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • பீகார் மாநிலம் அடைந்துள்ள அனைத்து நன்மைகளுக்கும் நிதிஷ் குமார்தான் காரணம் என்றார்.

புதுடெல்லி:

ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டம் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. பீகார் முதல் மந்திரியும், கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், மூத்த தலைவர்கள் லாலன் சிங், அசோக் சவுத்ரி, தேவேஷ் சந்திர தாகூர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயல் தலைவராக சஞ்சய் ஜா நியமனம் செய்யப்பட்டார். சஞ்சய் ஜா தற்போது மாநிலங்களவை ஐக்கிய ஜனதா தள குழு தலைவராக உள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ஜா, கட்சியின் செயல் தலைவராக நியமித்ததன் மூலம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் என்னிடம் மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார். நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுடன் இணைந்து மேலும் ஒருங்கிணைப்புடன் செயல்பட முயல்வோம். நிதிஷ் குமார் பீகாரில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். பீகார் மாநிலம் அடைந்துள்ள அனைத்து நன்மைகளுக்கும் அவர்தான் காரணம்.

வரும் 2025-ல் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். 19 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோதிலும் நிதிஷ் குமாருக்கு எதிராக மாநிலத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதை உணர்த்தி உள்ளன என தெரிவித்தார்.

இந்நிலையில், பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதித்தொகுப்பை மத்திய அரசு வழங்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளிப்பதால் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Tags:    

Similar News