இந்தியா (National)

ஓணம் பம்பர் குலுக்கலில் ரூ.25 கோடி பரிசு விழுந்த அதிர்ஷ்டசாலி யார்?

Published On 2024-10-10 02:06 GMT   |   Update On 2024-10-10 02:06 GMT
  • கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரிக்காக 80 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டது.
  • பரிசு விழுந்த நபர் விருப்பப்பட்டால் உரிய தகவலை அவரே வெளியிடலாம் என அரசு சார்பில் கூறப்படுகிறது.

திருவனந்தபுரம்:

கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் மற்றும் பூஜா பம்பர் டிக்கெட் விற்பனை தொடக்க விழா நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் கேரள நிதித்துறை மந்திரி கே.என்.பாலகோபால் பங்கேற்று ஓணம் பம்பர் லாட்டரி சீட்டு குலுக்கலை தொடங்கி வைத்தார். இந்த குலுக்கலில் முதல் பரிசு ரூ.25 கோடி டிஜி 434222 என்ற எண்ணுக்கு கிடைத்தது.

பின்னர் இதுகுறித்து மந்திரி கே.என்.பாலகோபால் கூறியதாவது:-

கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரிக்காக 80 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500. மொத்தம் 71 லட்சத்து 43 ஆயிரத்து 8 டிக்கெட்டுகள் விற்பனையானது. இந்த வருடம் வயநாடு பேரிடர் காரணமாக டிக்கெட் விற்பனை குறைந்தது. ஓணம் பம்பர் குலுக்கல் மூலம் 5 லட்சத்து 34 ஆயிரத்து 670 அதிர்ஷ்டசாலிகளுக்கு ரூ.125 கோடிக்கும் அதிகமான பரிசுகள் வழங்கப்படுகிறது. முதல் பரிசு ரூ.25 கோடி, வயநாட்டில் விற்பனையான சீட்டுக்கு கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு முன்பு ஓணம் பம்பரில் ரூ.25 கோடி பரிசு விழுந்த நபரின் பெயர் உடனடியாக தெரிந்ததும் அவருக்கு உறவினர்கள் மூலமாக பல்வேறு தொந்தரவு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ரூ.25 கோடி பரிசு விழுந்த நபரின் பெயரை உடனடியாக அறிவிப்பதை கைவிட்டுள்ளனர்.

அதே சமயத்தில் பரிசு விழுந்த நபர் விருப்பப்பட்டால் உரிய தகவலை அவரே வெளியிடலாம் என அரசு சார்பில் கூறப்படுகிறது. எனினும் தற்போதைய ஓணம் பம்பர் குலுக்கலில் ரூ.25 கோடி பரிசு விழுந்த அதிர்ஷ்டசாலி யார்? என்பதை அறிய மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

Tags:    

Similar News