இந்தியா

டாக்டர்களுடன் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை: போலீஸ் கமிஷனர், சுகாதாரத்துறை அதிகாரிகள் நீக்கம்

Published On 2024-09-17 01:17 GMT   |   Update On 2024-09-17 01:17 GMT
  • ஐந்து நிபந்தனைகளில் மூன்றை நிறைவேற்ற மம்தா பானர்ஜி சம்மதம்.
  • கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலை நீக்க மம்தா சம்மதம்.

மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த மாதம் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தடயங்களை அழித்த குற்றச்சாட்டில் மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், வழக்கை முதலில் விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டரையும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

இதற்கிடையே பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மாநிலம் முழுவதும் இளநிலை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். வேலைநிறுத்தம் 36 நாட்களை கடந்துள்ளது.

போராட்டத்தை முடித்துக் கொண்டு வேலைக்கு திரும்புமாறு மம்மா பானர்ஜி அழைப்பு விடுத்தார். ஆனால், டாக்டர்கள் அதை ஏற்க மறுத்தனர். இதனைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்குவிடுத்தார். பல்வேறு நிபந்தனைகளை டாக்டர்கள் விதித்ததால் நான்கு முறை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இந்த நிலையில்தான் நேற்றிரவு 5-வது மற்றும் கடைசி கட்ட பேச்சுவார்த்தைக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். அதன்படி டாக்டர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

அப்போது போராட்டக்காரர்கள் ஐந்து நிபந்தனைகள் விதித்தனர். அவற்றில் மூன்று நிபந்தனைகளை மம்தா பானர்ஜி ஏற்றுக் கொண்டார். அதன்படி கொல்கத்தா போலீஸ் கமிஷனர், ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி அமைந்துள்ள நகரின் வடக்கு பகுதி போலீஸ் தலைமை அதிகாரி ஆகியோரை நீக்க மம்தா சம்மதம் தெரிவித்துள்ளார். அத்துடன் இரண்டு சுகாதாரத்துறை அதிகாரிகளையும் நீக்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

"இந்த கூட்டம் நேர்மறையாக இருந்ததாக நினைக்கிறேன். உறுதியாக அவர்களும் அப்படி நினைப்பார்கள். டாக்டர்களின் 99 சதவீத நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஏனென்றால் அவர்கள் எங்களுடைய இளைய சகோதரர்கள். நாங்கள் சென்று ஆலோசனை நடத்தி அதன்பிறகு போராட்டத்தை கைவிடுவது பற்றி முடிவு செய்வோம் என அவர்கள் சொல்வார்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைக் கருத்தில் கொண்டு நோயாளிகளின் நிலையைக் காரணம் காட்டி அவ்வாறு செய்யுமாறு நான் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்" என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இருந்தபோதிலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை போராட்டம் தொடரும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையின் கட்டமைப்பு உயர்த்துவதற்காக மாநில அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலை நீக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News