இந்தியா (National)

பீகாரில் ரூ.30,000 கோடி மதிப்புள்ள கள்ளச்சாராய பொருளாதாரம் இயங்கி வருகிறது - தேஜஸ்வி யாதவ்

Published On 2024-10-19 13:06 GMT   |   Update On 2024-10-19 13:06 GMT
  • ரூ.30,000 கோடி மதிப்புள்ள கள்ளச்சாராய பொருளாதாரம் பீகாரில் இயங்கி வருகிறது.
  • பீகாரின் மூலை முடுக்கெங்கும் மதுக்கடைகளை திறந்த நிதிஷ்குமார் தற்போது மகாத்மா வேஷம் போடுகிறார்.

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 37 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல்வர் நிதிஷ்குமாரை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேஜஸ்வி யாதவ் அவரது எக்ஸ் பதிவில், "பூரண மதுவிலக்குதான் நிதிஷ்குமாரின் மிகப்பெரிய ஊழல். சுமார் ரூ.30,000 கோடி மதிப்புள்ள கள்ளச்சாராய பொருளாதாரம் பீகாரில் இயங்கி வருகிறது. நிதிஷ்குமாரின் கட்சியினர்தான் இதன்மூலம் அதிக பலன்களை பெற்று வருகின்றனர். தனது முதல் இரு ஆட்சிக்காலத்தில் பீகாரின் மூலை முடுக்கெங்கும் மதுக்கடைகளை திறந்தவர் தற்போது மகாத்மா வேஷம் போடுகிறார்.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கையின்படி, பீகாரில் மது தடை செய்யப்பட்டிருந்தாலும், மகாராஷ்டிராவை விட பீகாரில் அதிகமானோர் மது அருந்துகின்றனர்.

தற்போது பீகாரில் 15.5 சதவீதம் பேர் மது அருந்துகின்றனர். மது விற்பனைக்கு தடை இல்லாத மகாராஷ்டிராவில் வெறும் 13.9 சதவீதம் பேர் தான் மது அருந்துகின்றனர்.

பீகாரில் கள்ளச்சாராயம் தொடர்பாக சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 275 ரெய்டுகள் நடத்தப்படுகின்றன. அதாவது பீகார் காவல்துறையும் மதுவிலக்கு துறையும் ஒவ்வொரு மாதமும் சுமார் 2 லட்சம் இடங்களிலும், ஒவ்வொரு ஆண்டும் 24 லட்சம் இடங்களிலும் சோதனை நடத்துகின்றன. ஆனால் இதற்குப் பிறகும், சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனை தடையின்றி தொடர்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News