இந்தியா

'என் மைக்கை ஆஃப் செய்து அவமதித்தனர்': நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா வெளிநடப்பு

Published On 2024-07-27 07:27 GMT   |   Update On 2024-07-27 07:27 GMT
  • நிதி ஆயோக் கூட்டத்தில் முழுமையாக பேச எனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
  • நான் பேசி கொண்டிருக்கும் போதே என்னுடைய மைக்கை ஆஃப் செய்து அவமதித்துவிட்டார்கள்.

கொல்கத்தா:

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது.

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பெயர் கூட பட்ஜெட்டில் வாசிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல் மந்திரிகள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல் மந்திரிகளில் பலர் புறக்கணித்துள்ளனர்

ஆனால் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார்.

வெளியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "எதிர்க்கட்சிகளில் இருந்து ஒரே முதலமைச்சராக பங்கேற்ற எனக்கு முழுமையாக பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனக்கு முன் பேசியவர்கள் 20 நிமிடங்கள் வரை பேச அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் 5 நிமிடம் மட்டும் தான் எனக்கு பேச அனுமதிக்கப்பட்டது. மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசின் நிதி வழங்கப்படாததை குறித்து நான் பேசி கொண்டிருக்கும் போதே என்னுடைய மைக்கை ஆஃப் செய்து என்னை அவமதித்துவிட்டார்கள்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News