நவராத்திரி விழாவில் 6 கிலோ தங்கம், ரூ.3.50 கோடியில் அம்மனுக்கு அலங்காரம்
- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு 2000, 500,100, 50 என ரூ.3.50 கோடி ரூபாய் நோட்டுகள் கொண்டு அம்மனை அலங்கரித்து இருந்தனர்.
- தங்க பிஸ்கட்டுகளை அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
திருப்பதி:
நவராத்திரி விழாவையொட்டி கோவில்கள், வீடுகளில் விதவிதமான சாமி சிலைகள் கொலுவில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.
ஒரு சில இடங்களில் வித்தியாசமாக ரூபாய் நோட்டுகள், தங்கம், வெள்ளி நகைகளை கொண்டு சாமிக்கு அலங்காரம் செய்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு 2000, 500,100, 50 என ரூ.3.50 கோடி ரூபாய் நோட்டுகள் கொண்டு அம்மனை அலங்கரித்து இருந்தனர்.
மேலும் 6 கிலோ எடையுள்ள தங்க நகைகள் கொண்டு சாமி அலங்கரிக்கப்பட்டு, தங்க பிஸ்கட்டுகளை அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனால் கோவிலுக்கு முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதேபோல் பிரகாசம் மாவட்டம் கிட்டலூருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 1 கோடியே 2 ஆயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, 108 தங்க மலர்களை கொண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதனை திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.