இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் 13 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

Published On 2024-08-02 03:07 GMT   |   Update On 2024-08-02 03:07 GMT
  • நாடு முழுவதும் உள்ள 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 750 தேர்வு மையங்களில் சுமார் 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
  • ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஏராளமானோரை சிபிஐ கைது செய்தது.

புதுடெல்லி:

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் உள்ள 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 750 தேர்வு மையங்களில் சுமார் 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்த 'நீட்' தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக பீகார் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. அதேபோல் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலத்தில் ஆள்மாறாட்டம் மற்றும் மோசடிகள் நடைபெற்றது தெரிந்தது.

இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்குகள் அனைத்தும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஏராளமானோரை சிபிஐ கைது செய்தது. அவர்களில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 13 பேர் மீது தற்போது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News