இந்தியா (National)

சூடான சாப்பாடு கேட்ட வயதான தந்தைக்கு அடி-உதை

Published On 2024-10-25 04:34 GMT   |   Update On 2024-10-25 04:34 GMT
  • கிருஷ்ணய்யர் வலியால் அலறி துடித்தார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம், ஜல்லபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணய்யர். இவரது மனைவி மாதம்மா. தம்பதிக்கு 3 மகன்கள், 1 மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

மாதாம்மா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் கிருஷ்ணய்யர் இளைய மகனுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு இளைய மகனின் மனைவி கிருஷ்ணய்யருக்கு சாதம் பரிமாறினார். பழைய சாதம் என்பதால் குளிர்ச்சியாக இருந்தது. இதனைப் பார்த்த கிருஷ்ணய்யர் மருமகளிடம் சூடான சாப்பாடு வேண்டும் என கூறினார்.

இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த மருமகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் கணவருக்கும், அவரது அண்ணனுக்கும் போன் செய்து உங்களது தந்தை சூடான சாதம் கேட்கிறார் என தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த மகன்கள் இருவரும் தந்தையை கடுமையாக தாக்கினர். கிருஷ்ணய்யர் வலியால் அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் மகன்களிடமிருந்து கிருஷ்ணய்யரை மிட்டனர்.

மகன்களின் தாக்குதலால் உயிருக்கு பயந்த கிருஷ்ணய்யர் ஜல்லாபுரத்திலிருந்து மணவபாடு வரை 6 கிலோ மீட்டர் நள்ளிரவில் தனியாக நடந்தே வந்தார்.

இரவு முழுவதும் பஸ் நிலையத்தில் தங்கி இருந்த கிருஷ்ணய்யர் நேற்று காலை மணவபாடு போலீஸ் நிலையத்தில் மகன்கள் மீது புகார் செய்தார்.

நிலத்தை விற்று வைத்திருந்த ரூ. 3 லட்சத்தை வாங்கிக் கொண்டு சாப்பாடு போடுவதாக கூறிவிட்டு தற்போது தன் மீது தாக்குதல் நடத்துவதாக புகாரில் கூறி இருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News