இந்தியா (National)

கடமை என்ற பெயரில் வீட்டுக்கு வருவதே இல்லை... போலீஸ்காரர்களின் மனைவிகள் குழந்தைகளுடன் போராட்டம்

Published On 2024-10-25 04:44 GMT   |   Update On 2024-10-25 04:44 GMT
  • போலீஸ்காரர்களை கொத்தடிமைகளாக பணி செய்ய வைக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.
  • போலீஸ்காரர்களின் மனைவிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தெலுங்கானா மாநிலத்தில் போலீஸ்காரர்களுக்கு நீண்ட நேரம் பணி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு விடுமுறை இல்லாமல் பணிச்சுமை ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் போலீஸ்காரர்கள் பலர் வீட்டிற்கு செல்லும் நேரத்தை குறைத்து அதிக நேரம் பணியில் ஈடுபடுகின்றனர்.

போலீஸ்காரர்கள் வீட்டுக்கு வருவதை தவிர்த்து வருவதால் அவர்களுடைய மனைவிகள் மற்றும் குழந்தைகள் அரசை கண்டித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

நேற்று முன்தினம் நல்கொண்டா, நிஜாமாபாத்தில் உள்ள டிச்பல்லி, வாரங்கலில் உள்ள மாமன்னூர் மற்றும் சிர்சில்லா ஆகிய இடங்களில் போலீஸ்காரர்களின் மனைவிகள், குழந்தைகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று 2-வது நாளாக ஜோகுலாம்பா கட்வால் மற்றும் சிர்சில்லா ஆகிய இடங்களில் பல்வேறு பட்டாலியன்களைச் சேர்ந்த போலீஸ்காரர்களின் மனைவி, குழந்தைகள் குடும்பத்தோடு நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கைகளில் பல்வேறு கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பினர். போலீஸ்காரர்களை கொத்தடிமைகளாக பணி செய்ய வைக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.

உரிமைகளை பாதுகாக்க வேண்டும். விடுப்பு இல்லாமல் நீண்ட நேரம் பணி செய்ய வைப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

"எங்களது கணவர்கள் வீட்டில் அதிக நேரம் செலவிடுவதில்லை. கடமை என்ற பெயரால், வீட்டுக்கு வருவதே இல்லை. எங்களிடமிருந்து விலகி இருக்க வைக்கப்படுகிறார்கள் என்றனர்.

போலீஸ்காரர்களின் மனைவிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

Tags:    

Similar News