இந்தியா (National)

சந்தர்ப்பவாத இந்தியா கூட்டணியின் பிற்போக்கு அரசியல் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டது: பிரதமர் மோடி

Published On 2024-06-01 15:24 GMT   |   Update On 2024-06-01 15:34 GMT
  • தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • அவர்களின் தீவிர பங்கேற்பே நமது ஜனநாயகத்தின் அடிக்கல்லாகும்.

இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலின் 7 கட்ட வாக்குப்பதிவு இன்றுடன் முடிவடைந்தது. ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி இன்று வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஜூன் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் மக்கள் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க வாக்களித்து இருப்பார்கள் என்ற நம்பிக்கை பிரதமர் மோடி வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்தியா வாக்களித்துள்ளது. தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் தீவிர பங்கேற்பே நமது ஜனநாயகத்தின் அடிக்கல்லாகும்.

அவர்களின் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் நமது தேசத்தில் ஜனநாயக உணர்வு செழித்து வளர்வதை உறுதி செய்கிறது. இந்தியாவின் நரி சக்தி மற்றும் யுவ சக்தி ஆகியவற்றை நான் சிறப்பாகப் பாராட்ட விரும்புகிறேன். தேர்தலில் அவர்கள் வலுவாக இருப்பது மிகவும் ஊக்கமளிக்கும் அறிகுறியாகும்.

அவர்கள் (வாக்காளர்கள்) எங்களின் சாதனைகளையும், ஏழைகள், விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வில் தரமான மாற்றத்தை ஏற்படுத்திய விதத்தையும் பார்த்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் தேர்ந்தெடுக்க வாக்களித்திருப்பார்கள் என்பதை என்னால் சொல்ல முடியும்.

சந்தர்ப்பவாத இந்தியா கூட்டணி வாக்காளர்களை ஒருங்கிணைக்க தவறிவிட்டது. அவர்கள் சாதி வெறி, வகுப்புவாத மற்றும் ஊழல்வாதிகள். இந்த கூட்டணி வாரிசு அரசியலை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு தேசத்திற்கான எதிர்கால பார்வையை முன்வைக்கத் தவறிவிட்டது.

மோடி வசை பாடுதல் என்ற ஒரே விசயத்துடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இத்தகைய பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர்.

எங்களின் வளர்ச்சி திட்டங்களை மிக நுணுக்கமாக மக்களுக்கு விளக்கி அவர்களை வாக்களிக்க தூண்டியதற்காக ஒவ்வொரு பாஜக தொண்டரையும் நான் பாராட்டுகிறேன். இவர்கள் வெற்றிக்கு மிகப்பெரிய பலம்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News