இந்தியா

பிரதமர் மோடிக்கு நிபந்தனையற்ற ஆதரவு: சிராக் பஸ்வான்

Published On 2024-06-06 14:38 GMT   |   Update On 2024-06-06 14:38 GMT
  • பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
  • சிராக் பஸ்வான் கட்சி 5 இடங்களில் போட்டியிட்டு ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

பாராளுமன்ற மக்களவை தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக-வுக்கு 240 இடங்கள் கிடைத்துள்ளது. ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது.

இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடி வீட்டில் ஆலோசனை நடத்தினர். அப்போது பிரதமர் மோடியை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுத்தனர்.

நேற்றைய கூட்டத்தில் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு இந்த அரசு பணியாற்ற முடிவு செய்துள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது மந்திரி சபையில் இடம் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை முக்கியமான இலாகாக்களை கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாங்கள் பிரதமர் மோடிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிராஜ் பஸ்வான் கூறுகையில் "நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடிக்கும், அவரது தலைமைக்கும் எங்களுடைய ஆதரவை நாங்கள் தெரிவித்தோம். எந்தவொரு நிபந்தனையின்றி அவரது தலைமையை ஏற்றுக் கொண்டோம். எந்த நிபந்தனையும் இருக்க முடியாது. இந்த வெற்றி பிரதமர் தலைமைக்கான வெற்றி.

தேசிய ஜனநாயக கூட்டணியை அவருடன் இணைத்து கொண்டு சென்றதன் காரணமாக எங்கள் கூட்டணி இந்த வெற்றியை பெற்றுள்ளது" என்றார்.

பீகார் மாநிலத்தில் சிராஜ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஐந்து இடங்களில் போட்டியிட்டது. ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 12 இடங்களில் வெற்றி பெற்றது. ஜித்தன் ராம் மஞ்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

Tags:    

Similar News