இந்தியா

அபுதாபி பட்டத்து இளவரசருடன் சந்திப்பு.. கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி

Published On 2024-09-09 14:15 GMT   |   Update On 2024-09-09 14:15 GMT
  • பட்டத்து இளவரசருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை.

அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் இரண்டு நாள் பயணமாக நேற்று (ஞாயிற்றுக் கிழமை) இந்தியா வந்தார். அவருடன் அமீரகத்தின் பல்வேறு துறை அமைச்சர்கள், வர்த்தக பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் இந்தியா வந்தது.

பட்டத்து இளவரசரான பிறகு முதல் முறையாக இந்தியா வந்த இளவரசர் ஷேக் காலித்-க்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவரை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வரவேற்றார். பின்னர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று மதியம் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.

பிரதமர் மோடியை தொடர்ந்து குடியரசு தலைவர் திரவுபதி முர்முவையும் அபுதாபி பட்டத்து இளவரசர் சந்தித்து பேசுகிறார். டெல்லியில் இன்றைய நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நாளை மும்பை செல்லும் பட்டத்து இளவரசர், அங்கு இரு நாடுகளின் வர்த்தக பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்வில் கலந்துகொள்கிறார்.

இதனிடையே அபுதாபி பட்டத்து இளவரசரை சந்தித்தது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானை வரவேற்பதில் மகிழ்ச்சி.

"பலதரப்பட்ட பிரச்சினைகளில் பயனுள்ள வகையில் பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தையில், வலுவான இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நட்பின் மீதான அவரது ஆர்வம் தெளிவாகத் தெரிந்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.



Tags:    

Similar News