இந்தியா

மற்ற பகுதிகளுக்கு எல்லாம் செல்ல திட்டமிடும் பிரதமர், வேண்டுமென்றே மணிப்பூரை தவிர்க்கிறார்- காங்கிரஸ்

Published On 2024-09-14 06:50 GMT   |   Update On 2024-09-14 06:50 GMT
  • வன்முறை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கமிஷன் அமைப்பு.
  • ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், அவகாசம் நீட்டிப்பு

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையிலான மோதல் கடந்த ஆண்டு மே மாதம் 3-ந்தேதி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை உருவாவதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய கடந்த ஆண்டு ஜூன் 4-ந்தேதி 3 பேர் கொண்ட கமிஷன் அறிவிக்கப்பட்டது.

இந்த கமிஷன் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் (தகவல் தொடர்பு பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "3 பேர் கொண்ட கமிஷனுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஆறு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. தற்போது வரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த கமிஷனுக்கு நவம்பர் 24-ந்தேதி வரை கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மணிப்பூர் மக்களின் வேதனை தொடர்கிறது.

இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல பிரதமர் மோடி தொடர்ந்து திட்டம் போட்டு வருகின்ற நிலையில், மிகவும் இன்னல்களை சந்தித்து வரும் மாநிலத்தை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹிமான்சு சேகர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அலோகா பிரபாகர் உள்ளனர்.

Tags:    

Similar News