இந்தியா

தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் கலைஞர்: பிரதமர் மோடி புகழாரம்

Published On 2024-06-03 09:29 GMT   |   Update On 2024-06-03 09:30 GMT
  • பொது வாழ்வில் தனது வாழ்க்கையின் பெரும்பாலான ஆண்டுகள் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தார்.
  • நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தபோது அவருடன் உரையாடியதை நினைவு கூர்ந்து பார்க்கிறேன்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாள் இன்று. அவரது 101-வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், கருணாநிதியுடன் இணைந்து பயணித்த அரசியில் வாழ்க்கை குறித்து நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி, கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு புகழாரம் சூட்டியுள்ளார்.

கலைஞர் கருணாநிதியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்த படத்தை பதிவிட்டு எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் "கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

பொது வாழ்வில் தனது வாழ்க்கையின் பெரும்பாலான ஆண்டுகள் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். தனது அறிவார்ந்த தன்மைக்காக பெரிதும் மதிக்கப்பட்டவர். நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தது உள்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் கலைஞர் கருணாநிதியுடன் நான் உரையாடியதை நினைவு கூர்ந்து பார்க்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி "காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறுகையில் "டாக்டர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் திமுகவைச் சேர்ந்த எனது சகாக்களுடன் இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல சந்தர்ப்பங்களில் அவரை சந்தித்து, அவர் சொல்வதைக் கேட்டு, அவருடைய ஞான வார்த்தைகளாலும், அறிவுரைகளாலும் பயனடையும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. அவரை சந்தித்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இந்த கொண்டாட்ட நாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று கூறினார்.

டெல்லி திமுக அலுவலகத்தில் கலைஞர் கருணாநிதி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் சோனியா காந்தி இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Tags:    

Similar News