இந்தியா (National)

பிரதமர் மோடியால் ராகுல் காந்தியை நேருக்குநேர் எதிர்கொள்ள முடியவில்லை: சத்ருகன் சின்ஹா

Published On 2024-07-31 13:57 GMT   |   Update On 2024-07-31 13:57 GMT
  • சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள்- அனுராக் தாக்கூர்.
  • அனுராக் பேசியதை அனைவரும் கேட்க வேண்டும் என பிரதமர் மோடி பாராட்டியிருந்தார்.

மக்களவையில் ராகுல் காந்தி பட்ஜெட் மீதான விவாதத்தின்போது உரையாற்றினார். அப்போது பல்வேறு விசயங்கள் குறித்து மத்திய அரசை விமர்சனம் செய்தார். மேலும் ஆறு பேர் தாமரை வடிவிலான சக்கரவியூகம் அமைத்து நாட்டு மக்களை சிக்கவைத்துள்ளனர் எனக் கூறினார்.

இதற்கு மந்திரியல்லாத பாஜக எம்.பி.யான அனுராக் தாக்கூர் பதில் அளித்தார். அப்போது தங்களது சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் எனக் குறிப்பிட்டார். இதனால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது.

பின்னர் அனுராக் தாக்கூரின் பேச்சு அடங்கிய வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, அனுராக் தாக்கூரை பாராட்டியிருந்தார்.

இந்த நிலையில் நேருக்குநேர் ராகுல் காந்தியை பிரதமர் மோடியால் எதிர்கொள்ள முடியவில்லை என சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சத்ருகன சின்ஹா இது தொடர்பாக கூறுகையில் "அனுராக் தாக்கூர் பேசியது தவறானது. சக்தி வாய்ந்த, பிரபலமான எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியின் சாதி பற்றி கேட்டது தவறானது. இதுபோன்று சாதி பற்றி நீங்கள் கேட்க முடியாது. அனுராக் தாக்கூரைப் புரியவைக்க முயற்சிக்கிறோம். மேலும் அவர் எங்களுக்கு சொந்தமானவர்.

தற்போது இருப்பது முன்னதாக இருந்ததுபோன்ற எதிரக்கட்சி அல்ல. அதேபோல் மத்திய அரசும் முன்னர் இருந்தது போன்ற மத்திய அரசு அல்ல. எதிர்க்கட்சி தலைவர் பிரதமர் மோடியை எதிர்த்து பயங்கரமாக விமர்சனம் செய்தபோது அவரை நேருக்குநேர் பிரதமர் மோடியால் எதிர்கொள்ள முடியவில்லை. இது ஒரு பலவீனமான அரசாங்கம். இப்படியே தொடர்ந்தால் பிரச்சனையாகிவிடும்" என்றார்.

Tags:    

Similar News