இந்தியா

பிரதமர் மோடி கோவில்-மசூதி, பிரிவினை குறித்து 421 முறை பேசியுள்ளார்: கார்கே

Published On 2024-05-30 10:22 GMT   |   Update On 2024-05-30 10:22 GMT
  • கடந்த 15 நாட்களில் மட்டும் காங்கிரஸ் பெயரை 232 முறை எடுத்துள்ளார்.
  • அவருடைய பெயரை 758 முறை பயன்படுத்தியுள்ளார்.

இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலின் கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வடைகிறது. ஜூன் 1-ந்தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த தேர்தலின் பிரசாரத்தில் பிரிவினையை தூண்டும் வகையிலும், மதம் தொடர்பாகவும் தலைவர்கள் வாக்கு சேகரித்த நிகழ்வு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜனதா கூட்டணி சார்பிலும், இந்தியா கூட்டணி சார்பிலும் மாறிமாறி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் தேர்தல் ஆணையம் சாதி மற்றும் மதம் அடிப்படையில் வாக்கு கேட்கக் கூடாது என தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி 421 முறை கோவில்- மசூதி, பிரிவினை பற்றி பேசியுள்ளார் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் 421 முறையை கோவில்-மசூதி, பிரிவினை பற்றி பேசியுள்ளார். கடந்த 15 நாட்களில் மட்டும் காங்கிரஸ் பெயரை 232 முறை எடுத்துள்ளார். அவருடைய பெயரை 758 முறை பயன்படுத்தியுள்ளார். ஆனால் அவர் வேலைவாய்ப்பின்மையை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ஜூன் 4-ந்தேதி மாற்று அரசை அமைப்பதற்கான அதிகாரத்தை மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியா கூட்டணி முழுப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். எங்களுடைய பார்வையில் இந்த அரசு (மோடி தலைமையிலான மத்திய அரசு) இன்னொரு முறை வாய்ப்பு பெற்றால், அது ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வரும்.

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News