இந்தியா

ஆட்சிக்கு வந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்படும் - பிரசாந்த் கிஷோர் தடாலடி

Published On 2024-09-15 05:26 GMT   |   Update On 2024-09-15 05:26 GMT
  • வரும் அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று கட்சியை தொடங்க உள்ளார் பிரசாந்த் கிஷோர்
  • மற்ற அரசியல்வாதிகளை போல் பெண்களின் ஒட்டு கிடைக்காதே என்று பயந்து மதுவிலக்குக்கு எதிராக பேச தயங்க மாட்டேன்.

2014 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியைப் பிடிக்க முக்கிய பங்காற்றியவர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். அதுவரை குஜராத் மக்களிடையேயும், அரசியல் களத்தில் மட்டுமே பிரபலமாக இருந்த மோடியை தேசிய பிம்பமாக கட்டமைத்ததில் பிரசாந்த் கிஷோருக்கு முக்கிய பங்கு உண்டு. தொடர்ந்து நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பிராண்டிகிங் ஆலோசனைகளுக்காக பிரசாந்த் கிசோரை நாடத் தொடங்கின.

பீகார் மாநிலத்தவரான பிரசாந்த் கிஷோர் தற்போது அங்கு ஜன ஜன் சுராஜ் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி அடுத்த வருடம் நடக்க உள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலில் களம் காண உள்ளார். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று கட்சியை தொடங்க உள்ள பிரசாந்த் கிஷோர், தாங்கள் ஆட்சிக்கு வந்த 1 மணி நேரத்துக்குள் அம்மாநிலத்தில் அமலில் உள்ள மதுவிலக்கை ரத்து செய்வோம் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டத்திலிருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் செயல்பாடுகளையும், பிராதான எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் பிரசாந்த் கிஷோர்.

இந்த நிலையில்தான் தற்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரசாந்த் கிஷோர், மாநிலத்தில் அமலில் உள்ள மதுவிலக்கு முதல்வர் நிதிஷ் குமாரின் கண்துடைப்பு வேலை. தற்போதுள்ள மதுவிலக்கால் எந்த பிரயோஜனமும் இல்லை. சட்டவிரோதமாக மதுபானங்கள் ஹோம் டெலிவரி செய்யப்படுகிறன. அதேவேளை மதுவிலக்கால் மாநிலத்துக்கு ரூ.20,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சட்டவிரோத மது விற்பனையால் பயனடைகின்றனர். நான் நடைமுறைக்கு பயனளிக்கும் அரசியலை நம்புபவன். மற்ற அரசியல்வாதிகளை போல் பெண்களின் ஒட்டு கிடைக்காதே என்று பயந்து மதுவிலக்குக்கு எதிராக பேச தயங்க மாட்டேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 1 மணி நேரத்தில் மதுவிலக்கு துடைத்தெறியப்படும் என்று தெரிவித்துள்ளார். 2016 ஏப்ரல் 1 முதல் பீகாரில் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News