இந்தியா

பெண் டாக்டர் கொலை: தாமாக முன்வந்து வழக்கு பதிந்தது சுப்ரீம் கோர்ட்

Published On 2024-08-18 11:43 GMT   |   Update On 2024-08-18 11:43 GMT
  • சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைதுசெய்தனர்.
  • சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதால் தற்போது சி.பி.ஐ. இந்த வழக்கின் விசாரணை நடத்துகிறது.

புதுடெல்லி:

மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த 31 வயது பயிற்சி பெண் டாக்டர், கல்லூரி கருத்தரங்கு அறையில் கடந்த 9-ம் தேதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைதுசெய்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதால், தற்போது சி.பி.ஐ. இந்த வழக்கின் விசாரணையை நடத்தி வருகிறது.

இச்சம்பவத்தை கண்டித்தும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரியும் மாநிலம் முழுவதும் பயிற்சி டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரி மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் பேரணி நடத்தினார்.

இந்நிலையில், பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளது.

அதன்படி, இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆகஸ்ட் 20-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News