இந்தியா

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா: எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்

Published On 2024-08-05 11:56 GMT   |   Update On 2024-08-05 11:56 GMT
  • தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வக்பு வாரியத்தின் சுயாட்சியை பறிக்க விரும்புகிறது- ஒவைசி.
  • முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்க பாஜக முயற்சிக்கிறது- அகிலேஷ் யாதவ்.

மத்திய அரசு வக்பு வாரியங்களை நிர்வகிக்கும் சட்டத்தில் (1995) திருத்தம் கொண்டு வர இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அப்படி திருத்தம் கொண்டு வந்தால் இந்த சட்டத்திற்காக திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்ப்போம் என பல எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள வக்பு வாரியங்களுக்கு சொந்தமான சொத்துகள் மூலம் வருடத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சொத்து மதிப்புகளை வைத்து பார்க்கும்போது இந்த தொகை குறைவு எனக் கூறப்படுகிறது.

அதிக பொறுப்பு மற்றும் வெளிப்படத்தன்மை, பெண்களுக்கு வாரியத்தில் இடத்தை உறுதி செய்வது உள்ளிட்ட திருத்தங்களை சட்ட திருத்த மசோதாவில் மத்திய அரசு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தில் இருந்து வரும் கோரிக்கைகளின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் "மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் சட்ட திருத்த மசோதாவை நாங்கள் எதிர்ப்போம். முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்க பாஜக முயற்சிக்கிறது. இந்துக்கள், முஸ்லிம்கள் என பிரிக்கும் வேலையை மட்டுமே பாஜக செய்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கை தவறான நோக்கம் கொண்டது என ஐயுஎம்எல்-ன் இ.டி. முகமது பாஷீர் தெரிவித்துள்ளார். மேலும் "இது தொடர்பாக சட்டம் கொண்டு வரப்பட்டால் நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவிப்போம். எதிர்க்கும் மனநிலை கொண்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்றார்.

சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி "பாஜக தலைமையிலான அரசு பட்ஜெட் மீதான விவாதத்தில் இருந்து தப்பிக்க விரும்புகிறது, எனவே அவர்கள் வக்ஃப் பிரச்சனையை கொண்டு வந்துள்ளனர். பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வரை நான் இது குறித்து கருத்து தெரிவிக்கமாட்டேன்" என்றார்

சிபிஐ (எம்) எம்.பி. அம்ரா ராம் "வக்பு வாரியங்களை வலிமைப்படுத்துவதற்குப் பதிலாக பிரித்தாளும் அரசியலை பாஜக நம்புகிறது. அதில் தலையிட முயற்சி செய்து வருகிறார்கள்" என்றார்.

"தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வக்பு வாரியத்தின் சுயாட்சியை பறிக்க விரும்புகிறது" என ஒவைசி அசாதுதீன் விமர்சித்துள்ளார்.

Tags:    

Similar News