இந்தியா (National)

'குணப்படுத்தும் கரங்கள், அக்கறையுள்ள இதயங்கள்'... தேசிய மருத்துவர் தின வாழ்த்துகள்

Published On 2024-07-01 02:52 GMT   |   Update On 2024-07-01 02:52 GMT
  • மனிதர்களின் வாழ்க்கையில் மருத்துவர்களுக்கு எப்பொழுதுமே உயர்வான இடம் உண்டு.
  • நேரம் காலம் பார்க்காமல், ஓய்வு இன்றி உழைக்கக்கூடியவர்கள் மருத்துவர்கள்.

டாக்டர் பிதான் சந்திர ராய் இந்தியாவின் பெருமைக்குரிய மருத்துவ மேதை. மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சைக்கான படிப்புகளை ஒரே நேரத்தில் படித்தவர். விடுதலை போராட்ட வீரராகவும் இருந்தார். சுதந்திரம் பெற்ற பிறகு மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதல்-அமைச்சராக 14 ஆண்டுகள் பதவி வகித்தார். அப்போதும் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். இவரது சேவைகளைப் பாராட்டி, 1961-ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

ராயின் பிறந்த நாளான ஜூலை 1, தேசிய மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகின் பல நாடுகளிலும் மருத்துவர்கள் தினம் வெவ்வேறு மாதங்களில் வெவ்வேறு காரணங்களை முன்வைத்து அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் 1991-ம் ஆண்டிலிருந்து ஜூலை 1-ந் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் முக்கியத்துவம், பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மருத்துவத் தொழிலை மேம்படுத்தவும் இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது.


மனிதர்களின் வாழ்க்கையில் மருத்துவர்களுக்கு எப்பொழுதுமே உயர்வான இடம் உண்டு. நேரம் காலம் பார்க்காமல், ஓய்வு இன்றி உழைக்கக்கூடியவர்கள் மருத்துவர்கள். கொரோனா போன்ற கொள்ளை நோய் காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் தியாகத்துக்கு ஈடு எதுவும் இல்லை.

நோயாளிகளின் நல்வாழ்வுக்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள், நோய்நிலையில் இருந்து விரைவாக மீட்க உதவுகிறார்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துகிறார்கள். அவர்கள் மருத்துவ அறிவியலை நன்கு புரிந்துகொண்டு நோயாளிகளின் மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கும் தங்கள் அறிவை அர்ப்பணிக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை கொண்டு மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு தேசிய மருத்துவர் தினத்தின் கருப்பொருள் 'குணப்படுத்தும் கரங்கள், அக்கறையுள்ள இதயங்கள்' என்பதாகும். மருத்துவத்துறையில் குறிப்பிடத்தகுந்த வகையில் முன்னேற்றங்களைக் கண்டுள்ள இந்தியா, இன்னும் மருத்துவர்களையே பார்த்திராத கிராமங்களுக்கும் சேவை அளிக்க வேண்டியிருக்கிறது.


மனித உயிர்களைக் காக்கும் அற்புதமான பணியை மேற்கொண்டு வரும் மருத்துவர்களை இந்த நாளில் நினைவுகூர்வோம். நமக்கு மருத்துவ ஆலோசனைகளை கூறும் நம் மருத்துவர்களிடம் இன்று அன்பையும், நன்றியையும், வாழ்த்துகளையும் பகிர்ந்துகொள்வோம்.

Tags:    

Similar News