இந்தியா

கேரளாவில் 22-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை: பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு- மஞ்சள் அலர்ட்

Published On 2024-06-19 05:31 GMT   |   Update On 2024-06-19 05:31 GMT
  • 22-ந்தேதி காசர்கோடு மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
  • கேரள கடற்கரைகளில் கள்ளக்கடல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கடந்தமாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் சுழற்சியின் காரணமாக கேரளாவில் வருகிற 22-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அங்கு 21 மற்றும் 22-ந்தேதிகளில் கேரள மாநிலத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று எர்ணாகுளம், கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திருவனந்தபுரம், கொல்லம் ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

நாளை(20-ந்தேதி) கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும், நாளை மறுநாள்(21-ந்தேதி) இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கும், 22-ந்தேதி காசர்கோடு மாவட்டத்துக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வருகிற 22-ந்தேதி ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் கேரள கடற்கரைகளில் கள்ளக்கடல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News