இந்தியா

கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி- வாலிபர் கைது

Published On 2024-07-03 05:35 GMT   |   Update On 2024-07-03 05:35 GMT
  • கழிவறையில் இருந்து குழந்தை சத்தம் கேட்பது தெரியவந்தது.
  • மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சீனிவாசபூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர் வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தார். அப்போது திடீரென வயிற்று வலியால் அவதிப்பட்ட மாணவி கல்லூரி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார்.

அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. அப்போது மாணவி மயக்கத்தில் இருந்தார். இந்த நிலையில் குழந்தையின் அழுகுரல் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்ததால் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எங்கிருந்து குழந்தை அழும் சத்தம் வருகிறது என்று தேடினர். அப்போது கழிவறையில் இருந்து குழந்தை சத்தம் கேட்பது தெரியவந்தது.

இதையடுத்து மாணவி மற்றும் குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு குழந்தை பிறந்த தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். மேலும் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக மாணவியிடம் கோலார் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவி கொடுத்த தகவலின் அடிப்படையில் அனில்குமார் (21) என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி கழிவறையில் மாணவி குழந்தை பெற்ற சம்பவம் கல்லூரி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

Tags:    

Similar News