இந்தியா

தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

Published On 2024-08-25 05:23 GMT   |   Update On 2024-08-25 05:23 GMT
  • இன்று காலையில் கூட்டம் மேலும் அதிகரித்தது.
  • சில மணி நேரங்களில் நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் தீர்ந்தன.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவில் பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர்.

நேர ஒதுக்கீடு இலவச டோக்கன் வழங்கும் இடங்களில் அதிக அளவில் பக்தர்கள் இருந்தனர். இதனால் சில மணி நேரங்களில் நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் தீர்ந்தன.

நேரடி இலவச தரிசனத்தில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி வெளியே வரிசையில் பக்தர்கள் காத்து நின்றனர். இன்று காலையில் கூட்டம் மேலும் அதிகரித்தது. இதனால் 24 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதியில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கூடுதலாக தண்ணீர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்துள்ளது.

இதற்காக திருப்பதி மாநகராட்சிக்கு ரூ. 5 கோடி திருப்பதி கோவில் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதியதாக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 79 ஆயிரத்து 521 பேர் சாமி தரிசனம் செய்தனர். 40 ஆயிரத்து 152 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.87 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News