இந்தியா

புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் பதியப்பட்ட முதல் வழக்குகள் இவைதான்.. எங்கெங்கு தெரியுமா?

Published On 2024-07-02 07:00 GMT   |   Update On 2024-07-02 07:00 GMT
  • புதிய கிரிமினல் சட்டத்தில் பதியப்பட்ட முதல் வழக்கு அது கிடையாது
  • நேற்று ஒரே நாளில் டெல்லியில் மட்டுமே புதிய குற்றவியல் சட்டங்களின்கீழ் 300 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் நேற்று முதல் அவை அமலுக்கு வந்துள்ளன.

 

பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் கீழ் முதல் வழக்கு டெல்லியில் உள்ள தள்ளுவண்டிக் கடைக்காரர் மீது பாய்ந்தது. டெல்லி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள சாலையில் தள்ளு வண்டியில் வைத்து தண்ணீர் பாட்டில்கள், பீடி,சிகரெட்டுகள் விற்றுக்கொண்டிருந்தார்.

அவரது வண்டி சாலையில் செல்பவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி அவர் மீது தனது உடைமையைக் கொண்டு பொதுமக்களுக்கு பாதிப்பு விளைவித்த குற்றத்துக்காக புதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 285 இந்த கீழ் தள்ளுவண்டிக்கடைக்காரர் மீது தற்போது எப்.ஐ.ஆர் பதியப்பட்டது என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் அவரை மன்னித்து அவர் மீதான வழக்கு நீக்கப்பட்டுள்ளது என்றும் எனவே புதிய கிரிமினல் சட்டத்தில் பதியப்பட்ட முதல் வழக்கு அது  கிடையாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

 

மேலும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின்கீழ் முதல் வழக்கு மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் மோட்டார் சைக்கிள் திருட்டு குற்றத்துக்காக ஒருவர் மீது பதியப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பாரதிய நியாய சன்ஹிதா [பி.என்.எஸ்] சட்டத்தின்கீழ் முதல் வழக்காக ஹைதராபாத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம்   ஒ ஓட்டியதாக இரண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று ஒரே நாளில் டெல்லியில் மட்டுமே புதிய குற்றவியல் சட்டங்களின்கீழ் 300 வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News