இந்தியா

சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் - உமர் அப்துல்லா

Published On 2024-08-18 07:04 GMT   |   Update On 2024-08-18 07:04 GMT
  • உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரத்தை கையில் எடுத்துள்ளது
  • நாங்கள் மக்களவை தேர்தலுடன்,சட்டசபைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

சிறப்பு அந்தஸ்து ரத்து 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான சட்டப்பிரிவு 370 கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.

இது காஷ்மீரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. சமீபத்தில் அரசு அதிகாரிகளை நியமிக்கும் உரிமையைத் துணை நிலை ஆளுநருக்கு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் சட்டத்திருத்தம் கொண்டு வந்ததையும் பார்க்க வேண்டி உள்ளது.

 

சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு 

இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீருக்கு முதல் முறையாகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு செப்.,18லும், 2ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்., 25லும், 3ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்.,1லும் தேர்தல் நடைபெற உள்ளது. காஷ்மீரில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

அரசியல் களம்

இதனால் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கம் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை, பிரதான விஷயமாக கையில் எடுத்துள்ளது.

 

தீர்மானம் 

தேர்தல் அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் உமர் அப்துல்லா பேசுகையில், தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினால் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம். நாங்கள் மக்களவை தேர்தலுடன்,சட்டசபைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் கமிஷனின் முடிவை வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News