இந்தியா
கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம்: மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராகுல்காந்தி
- மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ராகுல்காந்தி முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "புதிய பதவிக்கு தேர்வாகியுள்ள எனது சகோதரர் ராகுல் காந்தியை இந்தியா வரவேற்கிறது. மக்களவையில் அவரது குரல் தொடர்ந்து வலிமையாக ஒலிக்கட்டும்" என்று பதிவிட்டு வாழ்த்தினார்.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதிவை பகிர்ந்து ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
அதில், "தெற்கில் இருந்து வடக்கு வரை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம்" என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.